Last Updated : 22 Oct, 2024 03:57 PM

1  

Published : 22 Oct 2024 03:57 PM
Last Updated : 22 Oct 2024 03:57 PM

போலி தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராத பல்கலை., பதிவாளர்கள் சேர்ப்பு: ஐகோர்ட் கிளை அதிரடி

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக்கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத சலுகை வழங்கியதை எதிர்த்து திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொலை நிலைக்கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கான சலுகை வழங்கியது சட்டவிரோதம் என அறிவித்து, போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழங்கிய பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் போலி சான்றிதழ் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சக்திராவ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களில் இருந்து போதுமான விவரங்கள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால் விசாரணை முடியாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள் தொடர்பான அடிப்படை விவரங்களைக் கூட பல்கலைக்கழகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன. எனவே, இந்த 4 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிடுகிறது. வழக்கு தொடர்பாக பதிலளிக்க பதிவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களில் இருந்து தேவையான ஆவணங்களை பெற லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும்.

விசாரணைக்குத் தேவையான விவரங்களை சேகரிக்க புலனாய்வு முகமைக்கு மேலும் கால அவகாசம் வழங்க விரும்பவில்லை. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும். எனவே, விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தவும், ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை பாதுகாப்பவர்களை வழக்கில் சேர்க்கவும் விசாரணை முகமைக்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.

பல்கலைக்கழகங்கள் தரப்பிலிருந்து ஆவணங்களைத் தர தாமதம் செய்தால் விசாரணை முகமை சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று, சோதனை நடத்தி ஆவணங்களை சேகரிக்கலாம். வழக்கின் முன்னேற்றம் குறித்து விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்.28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x