Published : 22 Oct 2024 02:54 PM
Last Updated : 22 Oct 2024 02:54 PM

தவெக மாநில நிர்வாகி மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது: விஜய் இரங்கல்

உயிரிழந்த தவெக நிர்வாகி சரவணன் (இடது)

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகி சரவணன் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு: “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில செயலர் சரவணன் (47). புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி தேவி மற்றும் மகன் உள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலம் தொட்டே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான சரவணன் ரசிகர் மன்ற முன்னோடியாக இருந்து வந்துள்ளார். தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், அதன் புதுவை மாநிலச் செயலாளராகவும், அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராக திகழ்ந்தார்.

வரும் 27-ம் தேதி அன்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டு வேலைகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார். பல நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். புதுச்சேரி திரும்பிய அவருக்கு நேற்று லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், குடும்பத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x