Published : 22 Oct 2024 01:42 PM
Last Updated : 22 Oct 2024 01:42 PM

கிளாம்பாக்கத்தில் ரூ.15 கோடியில் அமையும் காலநிலை பூங்கா: அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காலநிலை பூங்கா, மற்றும் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர் |  படங்கள்:  எம். முத்துகணேஷ்

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 16 ஏக்கர் பரப்பளவில் ரூ. 15.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் இன்று (அக்.22) நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகே 16.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.2 கோடி மதிப்பீட்டில் வாகனங்கள் நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் புதியதாக அமைக்கப்பட்டு வரும் காலநிலைப் பூங்காவை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் குழந்தைகளுக்கேற்ற விளையாட்டுப் பகுதிகள், இருக்கை வசதி, குடிநீர் வசதி, நடைபாதை பகுதி மற்றும் பேருந்து முனையத்தில் இருந்து பூங்காவுக்கு செல்ல பாதை வசதி ஆகியவற்றை ஆய்வு செய்து அதில் சிறு சிறு குறைகளைச் சுட்டிகாட்டி அவற்றை சரிசெய்ய அதிகாரிகளை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து முடிச்சூர் வெளிவட்ட சாலையில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இங்கு 270 படுக்கை வசதிகள், உணவகம், கழிப்பறை வசதி, ஹைமாஸ் விளக்கு மற்றும் தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர். ச. அருண்ராஜ், சி.எம்.டி.ஏ நிர்வாக செயலாளர் அன்சுல் மிஸ்ரா, செயலர் காகர்லா உஷா. எம்எல்ஏ-வான வரலட்சுமி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “காலநிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் பல்வேறு செடிகள், செயற்கை காடுகள், மழைநீர் தேக்கம், குளம், சிறுவர் பூங்கா போன்றவற்றுடன் அமைக்கப்படும் கால நிலை பூங்காவை இன்னும் ஒரு மாதத்துக்குள் முதல்வர் திறந்து வைப்பார். அன்றைய தினமே முடிச்சூரில் அனைத்து வசதிகளுடன் ரூ. 42.70 கோடியில் 150 பேருந்துகள் நிறுத்தக் கூடிய ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதல்வர் தொடங்கி வைப்பார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கபட உள்ள நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுகாதாரம், குடிநீர், கழிப்பறைகள், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை அதிகப்படுத்த இருக்கிறோம். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அதற்காக அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஸ்கைவாக் பணிக்காக நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் மலிவு விலை உணவகம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x