Published : 22 Oct 2024 12:59 PM
Last Updated : 22 Oct 2024 12:59 PM

‘யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது’ - மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான இர்பான் - ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், வீட்டில் இருந்து ஜூஸ் குடித்து விட்டு மருத்துவமனைக்கு வருதல், மருத்துவமனையில் பிரசவத்துக்கு முந்தைய கவனிப்பு மற்றும் பிரசவத்தின் போது நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இர்பானின் இந்த செயலுக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, கடந்தாண்டு தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை துபாய் நாட்டில் பரிசோதனை செய்து, அது தொடர்பான வீடியோவை இர்பான் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. அந்த வீடியோ தொடர்பாக பதிலளிக்குமாறு இர்பானுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, அந்த அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கினார்.

தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதுவரை மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடாத இர்பான், மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான், மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை சுகாதாரத் துறை முடிவு செய்திருந்து.

இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது. இந்தமுறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும், விடமாட்டோம். அவர் மன்னிப்புக் கேட்டாலும், அதை ஏற்க முடியாது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. மருத்துவர் நிவேதிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சியை தொடர தடை விதிக்க மருத்துவ கவுன்சில் சார்பில் பரிந்துரைக்கப்படும். தவறு செய்தவர்களுக்கு அரசு நிச்சயம் தண்டனை வழங்கும்.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x