Published : 21 Oct 2024 07:09 PM
Last Updated : 21 Oct 2024 07:09 PM

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு எப்படி தலையிட முடியும்? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: “சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பொது தீட்சிதர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் அரசின் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் நின்று தரிசிக்க உதவியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நடராஜ தீட்சிதர் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்தது. இதை எதிர்த்து பொது தீட்சிதர் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக இன்று (அக்.21) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அதில் அறநிலையத் துறை தலையிட முடியாது,” என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நடராஜர் கோயிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நடராஜ தீட்சிதர் இடைநீக்க விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர், நடராஜ தீட்சிதரின் இடைநீக்க காலம் ஏற்கெனவே முடிந்து விட்டது என்றும், தற்போது அவர் தில்லை காளியம்மன் கோயிலில் பணிபுரிந்து வருவதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இரு வழக்குகளையும் முடித்து வைத்தார். அதேசமயம், நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அறநிலையத் துறை தலையிட அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை இரு நீதிபதிகள் அமர்வின் முடிவுக்கு விட்டு விடுவதாகவும் நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x