Published : 21 Oct 2024 06:17 AM
Last Updated : 21 Oct 2024 06:17 AM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். திருச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (அக்.21) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (அக்.22) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 23-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 24, 25, 26-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் சாத்தியாரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (அக்.21) உருவாக உள்ளது. இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.22 ) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது மேலும் வலுவடைந்து, 23-ம் தேதி புயலாக மாறும் என்று தெரிகிறது. பின்னர், இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா - மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு இடையே 24-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறிய பிறகு, கத்தார் நாட்டின் பரிந்துரைப்படி இதற்கு ‘டானா’ என பெயரிடப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x