Published : 19 Oct 2024 04:43 PM
Last Updated : 19 Oct 2024 04:43 PM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் | கோப்புப் படம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மூவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் கைதான சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், தங்களுக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக இன்று (அக்.19) நடந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், “மனுதாரர்கள் மூன்று பேர் மீதும் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதேபோல், மேலும் பல வழக்கறிஞர்கள் ஆஜராகி அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி எஸ்.கார்த்திக்கேயன், “மனுதாரர்கள் மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x