Published : 18 Oct 2024 03:17 PM
Last Updated : 18 Oct 2024 03:17 PM

சென்னையில் ஆளுநர் தலைமையில் ‘இந்தி மாத’ நிறைவு விழா - மோடிக்கு ஸ்டாலின் ‘எதிர்ப்பு’ கடிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: “இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம்.” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (அக்.18) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து அக்.18 அன்று நிறைவடையும் ‘இந்தி மாத’ நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அவ்விழாவுக்கு தமிழக ஆளுநர் தலைமை தாங்கி நடத்தவிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம். அல்லது மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாட வேண்டும். மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடப்பது அப்பட்டமான இந்தித் திணிப்பு முயற்சி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்துள்ளார். அதன் விவரம்: சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவை ரத்து செய்க: ராமதாஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x