Last Updated : 17 Oct, 2024 08:01 PM

 

Published : 17 Oct 2024 08:01 PM
Last Updated : 17 Oct 2024 08:01 PM

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டு 68,569 வீடுகள் கட்ட இலக்கு: முதல் தவணையாக ரூ.209.20 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

கோப்புப்படம்

சென்னை: தமிழக கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் தவணையாக ரூ.209.20 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணையின் விவரம்: கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய ஊரக வளர்ச்சித்துறை, கிராமப்புற பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2029-ம் ஆண்டு வரை, கூடுதலாக 2 கோடி புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் அளித்தது. இதில், இந்த 2024-25ம் நிதியாண்டுக்கு தமிழகத்தில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த செப்.19ம் தேதி ஊரக வளர்ச்சி இயக்குனர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 2018-ம் ஆண்டு தரவுகளில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசு ஒரு வீட்டுக்கு, நிர்வாக செலவு தவிர்த்து ரூ.1.20 லட்சம் நிர்ணயித்துள்ளதாகவும், மத்திய அரசு 60 மற்றும் மாநில அரசு 40 சதவீத தொகைகள் அடிப்படையில் இந்த 68,569 வீடுகள் கட்ட வேண்டும். இதற்கு மொத்தமாக ஆகும் ரூ.836.81 கோடியில், மத்திய அரசு ரூ.502.09 கோடியை வழங்கும.மீதமுள்ள 334.72 கோடி மாநில அரசின் பங்காகும்.

இந்த நிதியில் முதல் தவணையாக, மத்திய அரசு நிர்வாக செலவையும் சேர்த்து ரூ.125.52 கோடி ஒதுக்க வேண்டும். முன்னதாக, இந்த திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட வீடுகள் ரத்து செய்யப்பட்டதால், மத்திய அரசின் பங்கான ரூ.314.13 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு ரூ.209.52 கோடி என ரூ.523.65 கோடி தமிழக அரசின் பொது கணக்கில் உள்ளது. மேலும், தமிழக அரசின் பங்காக இந்தாண்டுக்கு ரூ.83.68 கோடி ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த தொகையை, தற்போது அரசின் பொது கணக்கில் உள்ள ரூ.209.52 கோடியில் இருந்து சரிக்கட்டலாம். எனவே, மத்திய அரசின் பங்கான ரூ.314.13 கோடியில் இருந்து ரூ.125.52 கோடி மற்றும் மாநில அரசின் 209.52 கோடியில் இருந்து ரூ.83.68 கோடி என ரூ.209.52 கோடி நிதியை விடுவிக்க ஒப்புதல் அளிக்கும்படியும் கோரினார்.இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ரூ.209.20 கோடியை முதல் தவணையாக ஒதுக்கி உத்தரவிடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x