Published : 17 Oct 2024 07:01 PM
Last Updated : 17 Oct 2024 07:01 PM

‘அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்?’ - ஐகோர்ட் கேள்வி

சபாநாயகர் அப்பாவு | கோப்புப்படம்

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையில் கடந்தாண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கருத்துத் தெரிவித்திருந்தார். பேரவைத் தலைவரின் இந்த பேச்சு அதிமுகவுக்கும், அதிமுக எம்எல்ஏ-க்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக்கூறி பேரவைத் தலைவர் மு.அப்பாவுவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞரணி இணைச் செயலாளரான ஆர்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையே, தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், அதுவரை விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பேரவைத் தலைவர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள பாபு முருகவேலுக்கு எதிராக மனுதாரர் எந்தவொரு அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அவர் பொத்தாம் பொதுவாகத்தான் தெரிவித்துள்ளார்” என்றார்.

அதற்கு பாபு முருகவேல் தரப்பில், அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருந்ததால், கட்சி சார்பில் பேரவைத் தலைவருக்கு எதிராக அவதூறு வழக்கைத் தொடர தனக்கு கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் பி,வில்சன், “அரசியல் கட்சி சார்பில் வழக்கு தொடருவதாக இருந்தால் கட்சியின் தலைவரோ அல்லது பொதுச் செயலாளரோ தான் வழக்குத் தொடர முடியும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பேரவைத் தலைவரான அப்பாவு தனது பேச்சில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பேசவில்லை. சம்பந்தப்பட்ட 40 எம்எல்ஏ-க்களில் யாரும் இந்த வழக்கைத் தொடரவில்லை. பேரவைத் தலைவருக்கு எதிராக இந்த அவதூறு வழக்கைத் தொடர பாபு முருகவேலுக்கு என்ன அடிப்படை உரிமை உள்ளது? குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு இல்லை. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக கற்பனையாகக் கூறக்கூடாது” என கருத்து தெரிவித்தார். பின்னர் அதிமுக எம்எல்ஏ-க்கள் 40 பேர் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாக பேரவைத் தலைவர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என்பது குறித்து, மனுதாரர் விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்.22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x