Last Updated : 17 Oct, 2024 04:21 PM

 

Published : 17 Oct 2024 04:21 PM
Last Updated : 17 Oct 2024 04:21 PM

தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லும் வாகனங்களுக்கு முன்கூட்டியே பாஸ் வழங்க கோரி வழக்கு

மதுரை: தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லும் வாகனங்களுக்கு முன்கூட்டியே பாஸ் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டிஜிபி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘1979-ம் ஆண்டு முதல், சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜையை முன்னிட்டு தென் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பசும்பொன் கிராமத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன் கிராமத்துக்குச் செல்லும் வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்படும்.

இந்த பாஸ்கள் பெரும்பாலும் அக்டோபர் 29-ம் தேதி மாலை, அக்டோபர் 30-ம் தேதி காலை நேரங்கள் என தாமதமாகவே வழங்கப்படுகிறது. இதனால் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பசும்பொன்னுக்கு வந்து மரியாதை செலுத்த முடியாமல் போகிறது.கடந்தாண்டு முறையாக பாஸ் பெற்ற வாகனங்களை முதல் நுழைவாயில் வரை செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. குறிப்பாக, கோட்டைமேடு வழியாக வந்த வாகனங்கள் கோட்டைமேடு பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. அபிராமம் வழியாக வந்த வாகனங்கள் நந்திச்சேரி பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.தேவர் ஜெயந்தி அன்று மரியாதை செலுத்த இயலவில்லை எனில் பெரும் மன உளைச்சலுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

ஆகவே குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பாக வாகனங்களுக்கான பாஸ்களை வழங்கினால் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் உதவியாக அமையும். அதேபோல கடந்த ஆண்டுகளைப் போலவே உரிய பாஸ்களை வைத்திருப்பவர்கள் முதல் நுழைவாயில் வழியாகச் சென்று அங்க வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். இவை தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தேவர் ஜெயந்திக்கான வாகன பாஸ்களை குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு முன்பாகவே வழங்கவும், முறையான பாஸ்களை கொண்ட வாகனங்களை முதல் நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை விசாரித்தனர், “மனு தொடர்பாக டிஜிபி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x