Published : 16 Oct 2024 06:09 PM
Last Updated : 16 Oct 2024 06:09 PM

சென்னை மழை பாதிப்புகள்: 36 நிவாரண மையங்களில் 1,360 பேர் தங்கவைப்பு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கல். | படம்: ஆர்.ரகு

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1,360 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 131 மி.மீ. மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1360 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. நேற்று (அக்.15) காலை உணவு 1000 நபர்களுக்கும், மதிய உணவு 45,250 நபர்களுக்கும், இரவு உணவு 2,71,685 நபர்களுக்கும் வழங்கப்பட்டதோடு, இன்று (அக்.16) காலை உணவு 4,16,000 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரி ன் உத்தரவின்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களில் இன்றும் (அக்.16), நாளையும் (அக்.17) பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 412 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளததோடு, மீதமுள்ள இடங்களிலும் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6120 அழைப்புகள் வந்துள்ளன. இதன்மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 8 குழுவினர் தயாநிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மணலி, எழும்பூர், செனாய் நகர் மற்றும் பள்ளிக்கரணையிலும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் செனாய் நகர்-2, வில்லிவாக்கம் மற்றும் ராஜரத்தினம் அரங்கத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 80 வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 100 வீரர்கள், மீட்புப் படகு, இயந்திர ரம்பம், ஸ்டெக்சர் உள்ளிட்ட மீட்பு கருவிகளுடனும், சென்னையில் 103 படகுகளுடனும் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மழைக்காலத்தினை முன்னிட்டு, பொது சுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் நாள்தோறும் 100 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், மற்ற மாநகராட்சி, நகராட்சி, மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 89 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை (அக்.17) சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பும், 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | முழு விவரம்: வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x