Last Updated : 15 Oct, 2024 12:23 PM

 

Published : 15 Oct 2024 12:23 PM
Last Updated : 15 Oct 2024 12:23 PM

புதுச்சேரி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை: படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தம்

புதுச்சேரி: மீன்வளத்துறை அறிவிப்பால் புதுச்சேரி மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டு, மீனவர்கள் வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக, மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலுக்குள் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் ஏற்கெனவே கடலுக்குள் சென்றிருப்பவர்களும் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்று நேற்று பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பி விட்டனர்.

இரண்டாவது நாளாக இன்றும் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் கரை திரும்பி வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் அனைத்து மீன்பிடி படகுகளும் பாதுகாப்புடன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் துறைமுக பகுதியில் தங்களது வலைகளை சீர் செய்யும் பணியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தின் அலுவலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் முழு நேரமும் இயங்கும் ஒரு அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்பட துவங்கி உள்ளது. இதனுடைய தொடர்பு எண்: 0413-2353042. எனவே, மீனவர்கள் அவசர கால உதவிக்கு மேற்குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணையோ அல்லது பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1070 மற்றும் 1077, காவல் துறை உதவி எண்: 112 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x