Last Updated : 14 Oct, 2024 09:17 PM

 

Published : 14 Oct 2024 09:17 PM
Last Updated : 14 Oct 2024 09:17 PM

20% போனஸ் கோரி கொட்டும் மழையில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி பெரியார் சதுக்கம் எதிரில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்: என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வருகின்ற 18-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இங்கு சுமார் 13 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று (அக்.14) மாலை நெய்வேலி பெரியார் சதுக்கம் எதிரில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு செயலாளர் சேகர் பேசுகையில், வருகின்ற 18-ம் தேதி நள்ளிரவு முதல் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

மேலும் “19-ம் தேதி காலை என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாகவும், என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க பொதுச்செயலாளர் அந்தோணி செல்வராஜ் தற்காலிக பணியிடம் நீக்கம் செய்ததை என்எல்சி நிறுவனம் திரும்ப பெற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றார். ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொட்டும் மழையில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x