Published : 14 Oct 2024 12:11 PM
Last Updated : 14 Oct 2024 12:11 PM

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க ரயில்வே டிஎஸ்பி-கள் தலைமையில் தனிப்படை அமைப்பு

கோப்புப் படம்

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழக ரயில்வே காவல்துறை சார்பில், 3 டிஎஸ்பி-கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். விபத்து நடந்த இடத்தில் இருந்த ‘ஸ்விச் பாய்ன்ட்’ போல்ட்கள் கழற்றப்பட்டு இருந்தன. இது வழக்கத்துக்கு மாறாக இருந்தை கண்டுபிடித்தனர்.தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். இதுபோல, ரயில்வே போலீஸாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபு, கொருக்குப்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 4 பிரிவுகளில் ரயில்வே போலீஸார் போலீஸார் வழக்குபதிந்தனர். அதாவது, காயம் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்,கவனக்குறைவான செயலால் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவருக்கும் சம்மன் கொடுத்து விசாரிக்கவும் ரயில்வே போலீஸார் திட்டமிட்டுள்ளனனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக விசாரிக்க தமிழக ரயில்வே காவல் டிஎஸ்பிகள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பார்வையில், சென்ட்ரல் ரயில்வே காவல் டிஎஸ்பி கர்ணன், எழும்பூர் ரயில்வே காவல் டிஎஸ்பி ரமேஷ், சேலம் ரயில்வே காவல் டிஎஸ்பி பெரியசாமி ஆகிய தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படை குழுவிலும் 8 பேர் உள்ளனர்.

இவர்கள் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், அங்கு கிடைத்த ஆதாரங்கள், அன்றைய நாளில் பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விசாரணை நடத்த உள்ளனர். இதுபோல, விபத்து தொடர்பாக ஏதாவது ஆதாரங்கள் மற்றும் கருத்துகளை ரயில்வே போலீஸாரிடம் தெரிவிக்கலாம் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x