Last Updated : 13 Oct, 2024 05:25 PM

 

Published : 13 Oct 2024 05:25 PM
Last Updated : 13 Oct 2024 05:25 PM

“சாம்சங் தொழிலாளர் பிரச்சினைகளை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” - சிஐடியுவுக்கு தொமுச பேரவை வேண்டுகோள்

மாதிரிப் படம்

சென்னை: சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை ஊதி பெரிதுபடுத்துவதை விடுத்து, தீர்வு காண முயற்சிக்கும்படி சிஐடியுவுக்கு தொமுச பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தொமுச பேரவை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியில் இல்லாத போதும் கூட இடதுசாரிகளை ஆதரித்த ஓர் இயக்கம். நாடாளுமன்றத் தேர்தலி்ல் திருச்சியில் போட்டியிட்ட அனந்த நம்பியாருக்கு திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா, திமுகவினரின் கருத்தை நிராகரி்த்து ஆதரவு தெரிவித்தார். அதே போல், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 2010ல், போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் தொடர்பான தேர்தலில், சிஐடியு 14 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது.

அதை கேள்விப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தனது வருத்தத்தை தெரிவித்தார். அத்துடன், சென்னை, சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலை போராட்டங்களில் இடதுசாரிகளை அழைத்து பேசி இணக்கமான முடிவுகளை எடுத்தது திமுக அரசு.கடந்த 2006-11 ஆட்சிக்காலத்தில் ஹூண்டய் நிறுவன போராட்டத்தில் திமுக அரசு சுமுகமாக பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.

சர்வதேச தொிழலாளர் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் 1949 முதல் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேரம் ஆகிய தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை. ஆனால், சங்கங்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி பதிவு செய்யப்படுவதுடன், பேச்சுவார்த்தைக்கு வராத நிர்வாகத்தை அழைத்து பேசுவதும் தமிழகத்தில் தான். இதனால், பலன் அடைந்தது அதிகமாக சிஐடியு சங்கம் தான்.

இதை மறந்து சாம்சங் பிரச்சினையை மிகவும் பெரிதுபடுத்தி அதனை முடிவுக்கு கொண்டுவர இயலாத நிலை ஏற்படுகிறது. இதற்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சாம்சங் போராட்டம் சம்பந்தமாக நீங்கள் (சிஐடியு) கொடுத்த அறிக்கையில் இருந்து, சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் துறையில் தாமதமானதால், நீங்கள் நீதிமன்றம் சென்றுள்ளீர்கள். நீதிமன்றத்தில் வழக்கை தேக்க நிலையில் வைத்து தொழிலாளர் துறை பதிவு எண வழங்கவில்லை என்று அரசின் மீது குற்றம் சொல்கிறீர்கள் .இதில் என்ன நியாயம் உள்ளது. தீர்ப்பு வந்ததும் பதிவு எண் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்திலும், இந்தியாவிலும் எந்த ஒரு சங்கத்தையும் அங்கீகரிப்பதற்கான சட்டம் தற்போது இல்லை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். சட்டம் இல்லாத போது சட்டப்படி அரசு நடக்கவில்லை என குறைகூறுவதில் என்ன நியாயம் உள்ளது.

மேலும், ஊதிய உயர்வு கோரிக்கையில் சாம்சங் நிறுவனத்தை நிர்பந்தித்து நிவாரணமாக ரூ.5000 மற்றும் நீங்கள் வைத்த கோரிக்கைகள் சிலவற்றையும், வைக்காத கோரிக்கைகளையும் சாம்சங் நிர்வாகம் ஏற்றதாக உங்களிடம் தெரிவித்தனர். இது தொழிலாளர் ஆதரவு நிலைப்பாடு இல்லையா.

இவை அனைத்தையும் மறைத்து புதிய கோணத்தில் அரசை நிர்வாக ஆதரவு நிலை எடுப்பது போல் சித்தரித்து போராட்டத்தை பெரிதுபடுத்தி, முடிவுக்கு கொண்டுவருவதில் பல சிக்கல்கள் உருவாக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் போது அவரை தரம் தாழ்ந்து பேசுவதும், அவரை விமர்சிப்பதும், பிரச்சினைக்கு தீர்வு காண சரியாக இருக்குமா? அரசு எல்லா நிலைகளிலும் தங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு உறுதுணையாக தொமுச பேரவை செயல்படுகிறது. இந்நிலையில தாங்கள் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் முடிவுக்கு கொண்டுவருதில் தங்கள் அனுபவத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x