Published : 13 Oct 2024 11:40 AM
Last Updated : 13 Oct 2024 11:40 AM

கலைஞர் பூங்கா ஜிப்லைன் சம்பவம்: பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலடி

எம்ஆர்கே.பன்னீர்செல்வம் (இடது), எடப்பாடி பழனிசாமி (வலது)

சென்னை: “எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்டவர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப் பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம்.” என்று கலைஞர் பூங்கா ஜிப்லைன் சம்பவத்தில் இபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்.

முன்னதாக நேற்று, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஏற்பட்ட ஜிப்லைன் பழுது காரணமாக, ரோப் காரில் பயணித்து கொண்டிருந்த 2 பெண்கள் அந்தரத்தில் தொங்கியவாறு அலறி கூச்சலிட்டனர். இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, “அரசு பூங்கா புதிதாக திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பிவரும் மக்களின் உயிரோடு பாதுகாப்பற்ற உபகரணங்களை கொண்டு திமுக அரசு விளையாடுவது கண்டனத்துக்குரியது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவுக்கு நுழையவே ரூ.100 கட்ட வேண்டும். இதுதவிர ஒவ்வொரு வசதிக்கும் தனி கட்டணம்.

இவ்வாறு தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் திமுக, பூங்காவுக்கு வருகை தரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

அமைச்சர் பதிலடி: பழனிசாமியின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக வேளாண் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், “எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்ப பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே... என்ற ஆத்திரம்தான் காரணம்.” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை திமுக அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது?

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, கதீட்ரல் சாலையில் தமிழ்நாடு அரசு தோட்டக் கலை துறைக்கு சொந்தமான நிலம் 23 ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது. அந்த இடத்தை தோட்டக்கலை சங்கத்திற்காக 1910-ம் ஆண்டு அரசு வழங்கியது. காலப்போக்கில் அந்த நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் கைக்குச் சென்றது. 'விவசாய தோட்டக்கலைச் சங்கம்' என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்தார். அந்த இடத்திற்கு பட்டா பெற்று தோட்டக்கலை கிருஷ்ணமுர்த்தி ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். அதிமுக ஆட்சி நடைபெற்ற போது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1989-ல் கலைஞர் ஆட்சியின் போது 17 ஏக்கர் நிலத்தை சட்டப்படி மீட்டகப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீதியுள்ள நிலத்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்த நிலத்தை ஒட்டி உட்லன்ஸ் ட்ரைவ்-இன் ஹோட்டல் இருந்தது. ஒரு காலத்தின் சென்னையின் லேண்ட் மார்க்காக அந்த ஹோட்டல் பிரபலம். காரில் அமர்ந்தபடியே விஐபிகள் எல்லாம் வந்து அந்த ஹோட்டலில் சாப்பிடுவார்கள். அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் டிரைவ்-இன் உணவு விடுதி வசம் இருந்த நிலத்தை கலைஞர் அரசு மீட்டு, செம்மொழிப் பூங்காவை உருவாக்கியது. மீதமுள்ள நிலத்துக்கு தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தனிநபர் பட்டா பெற்று அவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்த சட்டப் போராட்டத்தால் மீதியுள்ள 6 ஏக்கர் நிலம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். இந்த இடம் முழுவதுமாக அரசு கையகப்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது. 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 115 கிரவுண்ட் நிலம் சட்டப் போராட்டம் மூலம் மீட்டதோடு ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் கலைஞர் பூங்காவாக மாற்றி திறந்து வைத்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

இந்த கோபம்தான் பழனிசாமிக்கு இப்போது ஜிப்லைன் பழுதில் வெளிப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்ப பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே... என்ற ஆத்திரம்தான் காரணம்.

எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜிப் லைன் பழுதடையவில்லை.

ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை. மேலும் ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும்.

அவர்கள் சென்ற அந்த இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி அவர்கள் தேங்கினர். பின்னர் அவர்கள்

சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்குதளம் சென்றடைந்தனர்.

ஆகவே எதிர்க் கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது.

இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே.

இப்பூங்காவிற்குள் நுழைய பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிப் லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீறூற்று போன்றவை அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன.

பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x