Published : 12 Oct 2024 09:17 PM
Last Updated : 12 Oct 2024 09:17 PM

கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்தவர் பத்திரமாக மீட்பு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்த வரை தீயணைப்பு துறையினர் போராடி உயிருடன் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பங்களாபாடி பழங்குடியின கிராமத்தில் வெள்ளை என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீடு நீண்ட காலமாக பயன்பாடற்ற நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த வீட்டின் மையப் பகுதிகள் இருந்த 20 அடி குழிக்குள் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து வெளியே வர இயலாமல் உயிருக்கு போராடி வருவதாக கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழி மிக குறுகியதாக இருந்ததால் உள்ளே இறங்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்பதால் தீயணைப்பு வீரர் ஆக்சிஜன் பொருத்திக்கொண்டு குழிக்குள் இறங்கினார். குழிக்குள் தொடர்ந்து மண் சரிந்து கொண்டிருந்ததாலும், மழை பெய்ததனாலும் இருள் சூழ்ந்ததாலும் தீயணைப்புத் துறையினருக்கு மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

இருப்பினும் சுமார் 2 மணி நேரம் போராடி இளைஞரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சோலூர்மட்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பயன்பாடற்றுக்கு கிடந்த வீட்டில் புதையல் ஏதேனும் உள்ளதா என்று யாரேனும் குழி தோண்டி இருக்க கூடும் என நினைத்து எட்டிப் பார்த்த சுப்ரமணி என்ற இளைஞர் தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x