Published : 12 Oct 2024 06:14 PM
Last Updated : 12 Oct 2024 06:14 PM

போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் கல்லூரி விடுதி காப்பாளரின் இடைநீக்கத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: சக ஆசிரியர்களின் பணி நீக்கத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி காப்பாளரின் பணியிடை நீக்க உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரை மாவட்டம் மாடக்குளத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் காப்பாளராக பணியாற்றும் சங்கர சபாபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 1999-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு பதவி உயர்வில் விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டேன். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர்கள் மற்றும் வார்டன்கள் வளர்ச்சி சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறேன்.

தமிழகத்தில் வசிக்கும் பழங்குடியினரின் கல்வியறிவு 54.34 சதவீதமாக உள்ளது. ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பல மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் சூழல் உள்ளது. பழங்குடியினர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இந்த பள்ளிகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் இடை நிறுத்தம் ஏதும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.

ஆனால், திடீரென அவர்களை கடந்த ஜூன் மாதம் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர். இதையடுத்து, எங்களது சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அளித்தோம். அதன்பிறகு கடந்த ஜூன் 30 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். இதில் சங்க நிர்வாகி என்ற முறையில் நானும் பங்கேற்றதால், எனக்கு பிரிவு 17-பி-ன் கீழ் குறிப்பாணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், எங்களது கோரிக்கை குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் முறையிட்டு மனு அளித்தோம். ஆனால் திடீரென என்னை இடைநீக்கம் செய்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த உத்தரவு அரசு பணியாளர்கள் நடத்தை விதிகளுக்கு எதிரானது மட்டுமின்றி சட்டவிரோதமும் கூட. எனவே எனது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரரின் பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x