Last Updated : 12 Oct, 2024 02:11 PM

 

Published : 12 Oct 2024 02:11 PM
Last Updated : 12 Oct 2024 02:11 PM

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி: பெரியகுளம் கும்பக்கரை அருவியில் இன்று (அக்.12) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்கு ஆர்வத்துடன் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கிமீ.தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது.

நீர்வரத்துக்கு ஏற்ப அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். கடந்த வாரம் நீர்வரத்து சீராக இருந்ததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் நேற்று கொடைக்கானல் பகுதியில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இன்று(அக்.12) அதிகாலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை என்பதால் ஏராளமானோர் நேற்று அருவியில் குளிக்க வந்திருந்தனர். திடீர் தடையால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வனத்துறையினர் கூறுகையில், வெள்ளம் வந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகியும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x