Published : 10 Oct 2024 03:45 PM
Last Updated : 10 Oct 2024 03:45 PM

தமிழக மீனவர்கள் 17 பேருக்கு அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் விடுதலை

கோப்புப் படம்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேருக்கு இன்று அபராதம் விதித்து அவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த செப். 28 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அந்தப் படகுகளிலிருந்த 17 மீனவர்களும் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

17 மீனவர்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் காவல் இன்று (அக்.10) நிறைவடைந்ததை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக், 17 மீனவர்களுக்கும் இலங்கை தலா ரூ. 50,000 (இந்திய மதிப்பு ரூ. 14 ஆயிரம்) அபராதம் விதித்து அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட 17 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். முன்னதாக, சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x