Published : 08 Oct 2024 05:50 AM
Last Updated : 08 Oct 2024 05:50 AM

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப்படம்

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக 13-ம் தேதி வரை மழை நீடிக்கும். திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரளா மற்றும் தென் தமிழகத்தின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக 13-ம் தேதி வரை மழை நீடிக்கும். திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மேற்கண்ட பகுதிகளுடன் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 10-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

11-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

12-ம் தேதி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 13-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்களுடன் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் 10 செ.மீ., நீலகிரி மாவட்டம் பார்வூட்டில் 7 செ.மீ., கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், நீலகிரி மாவட்டம் கெத்தை, மதுரை மாவட்டம் தானியமங்கலம், திருப்பூர் மாவட்டம் நல்லதங்காள் நீர்த்தேக்கம், நீலகிரி மாவட்டம் தேவாலா, விண்ட்வொர்த் எஸ்டேட், அழகரை எஸ்டேட், கின்னக்கோரை, கோவை, புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலை, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று முதல் 11-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x