Published : 06 Oct 2024 04:27 AM
Last Updated : 06 Oct 2024 04:27 AM

விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி

கோப்புப்படம்

சென்னை: விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை சாதனை நிகழ்வாக மாற்ற பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு கண்டுகளிக்க வேண்டும் என விமானப் படை அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று (6-ம் தேதி) மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இதை இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபடும்

குறிப்பாக, வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத் தில் ஈடுபடக் கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்கின்றன.

மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்துவகை விமானங்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபடும்.

ஆண்டுதோறும் இந்த வான் சாகச நிகழ்ச்சி டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்தது. பின்னர் டெல்லிக்கு வெளியே சண்டிகரில் 2022-ம் ஆண்டும், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஆண்டும் நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக சென்னையில் தற்போது நடை பெறுகிறது.

சென்னையில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்நிகழ்வை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்புகிறது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிட்டு இந்நிகழ்வை சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6,500 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், பொதுமக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன.

அக்.8-ம் தேதியன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் விமானப்படை விமானங்கள் சாகச ஒத்திகை நேற்று காலை நடைபெற்றது.

இதில் அதிநவீன ரஃபேல் விமானம் உட்பட பல போர் விமானங்கள் பங்கேற்றன. அதேபோல அணிவகுப்பு ஒத்திகையில் ஏராளமான விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியை விமானப்படை அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் நேரில் கண்டு ரசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x