Published : 06 Oct 2024 12:52 AM
Last Updated : 06 Oct 2024 12:52 AM

மாமல்லபுரத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி காதலி பலி: மற்றொரு பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது புதுச்சேரி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார். அதையறிந்து அவரது காதலன் மற்றொரு புதுச்சேரி அரசு பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுராந்தகம் அடுத்த கம்மாளம் பூண்டி கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது, மகன் யோகேஸ்வரன் படாளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல், கூடலூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை. இவரது, மகள் சபரீனா (20), இவரும் படாளம் பகுதியில் உள்ள அதே தனியார் கல்லூரியில் பி.இ 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இருவரும், கடந்த சில ஆண்டுகளாக காதலிப்பதாக கூறப்படுகிறது. காதலர்களான யோகேஸ்வரன மற்றும் சபரீனா இருவரும் சனிக்கிழமை காலை கல்லூரி விடுமுறையை முன்னிட்டு பைக்கில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர்.

அப்போது, முற்பகல் 12 மணியளவில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை (இசிஆர்) சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் கடக்கும்போது எதிரே வந்த மணல் லாரி மோதியதால், காதலர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், சாலையில் விழுந்த சபரீனா மீது சென்னையில் இருந்து புதுச்சேரியில் நோக்கி சென்ற புதுச்சேரி அரசு விரைவுப்பேருந்து ஏறியதில், காதலன் யோகேஸ்வரன் கண் முன்னே காதலி சபரீனா தலை நசுங்கி உயிருக்கு போராடினார். இதையடுத்து, அங்குள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், விரைந்து வந்த போலீஸார் ஆம்புலன்ஸில் ஏற்றி மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சபரீனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இந்நிலையில் கண் முன்னே காதலி இறந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாத காதலன் யோகேஸ்வரன், உடனடியாக காதலி சபரீனா இறந்த தகவலை மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் இருந்தே அவரது பெற்றோருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். பிறகு, அங்கிருந்து 2 மணியளவில் திடீரென சிறிது தூரம் ஓடி சென்று இசிஆர் சாலையில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகத்தில் சென்ற மற்றொரு புதுச்சேரி அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது, 250 மீட்டர் இழுத்துச் சென்று உடல் இரண்டு துண்டாகி, சம்பவ இடத்திலேயே யோகேஷ்வரன் பலியானார்.

பிறகு, மாமல்லபுரம் போலீஸார் பேருந்து மோதி தலை நசுங்கி இறந்த சபரீனா மற்றும் பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யோகேஸ்வரன் இருவரது உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா பட பாணியில் பேருந்து ஏறி காதலன் கண் முன்னே காதலி இறந்த துக்கத்தில் காதலன் பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாமல்லபுரம் இசிஆர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த, சாலை விபத்தால் பூஞ்சேரி இசிஆர் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x