Last Updated : 04 Oct, 2024 04:13 PM

 

Published : 04 Oct 2024 04:13 PM
Last Updated : 04 Oct 2024 04:13 PM

“டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

கோவை சிங்காநல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமுதாய நல மைய கட்டிடத்தை திறந்து வைத்து மருத்துவ பரிசோதனையை  சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். | படம்: ஜெ.மனோகரன்.

கோவை: “டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக இருந்தது” என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமுதாய நல மைய கட்டிடம் மற்றும் தாளியூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.58.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார கட்டிடம் ஆகியவற்றை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.4) திறந்து வைத்தார். \

இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1,021 மருத்துவர்கள், 946 மருந்தாளுநர்கள், 526 உதவியாளர்கள், 977 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே முதல்முறையாக கலந்தாய்வு நடத்தி அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளோம்.

மேலும் 2,253 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் பணி நியமன தேர்வு நடைமுறைகள் தொடங்கி உள்ளன. அதேபோல 1,066 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் 38 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்கு தொடர்ந்தவர்களை அழைத்துப் பேசி வருகிறோம். படித்து முடித்தவர்கள் அனைவரும் அரசு வேலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கு தொடர்வதால் பணி நியமன நடைமுறைகளில் காலதாமதமாகி வருகிறது. கிராம சுகாதார செவிலியர்கள் 2,250 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன.

வழக்குத் தொடர்ந்தவர்களை அழைத்துப் பேசி வருகிறோம். மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் நமக்கு போதிய அளவில் வந்து கொண்டிருக்கிறது. அதனால் எங்கும் பற்றாக்குறை இல்லை. ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு வருபவர்களை நிரந்தரப்படுத்த முடியாது. எந்த அரசும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க முடியாது. ஒப்பந்த பணிக்கு வருபவர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் தேர்வெழுதி நிரந்தர பணிக்கு வரலாம். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

அண்மையில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசு செயலர்கள் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஒவ்வோர் பருவ மழைக்கு முன்பாகவும் மழைகால சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நடமாடும் மருத்துவ வாகனங்களின் மூலம் அதிக காய்ச்சல் உள்ள கிராமங்களில் காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பருவ மழை தொடங்கிய பிறகு அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு தேவைப்படும் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அமைத்து சிகிச்சை வழங்கப்படும். தமிழகத்தில் 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதர ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது.

டெங்கு இறப்பைப் பொருத்தவரையில் தமிழக வரலாற்றில் 2012, 2017 ஆண்டுகளில் தான் அதிகபட்ச இறப்பு பதிவாகி உள்ளது. நிகழாண்டில் இப்போது டெங்கு உயிரிழப்பு 6 ஆக உள்ளது. டெங்கு உயிரிழப்பு 2012, 2017-ல் அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக இருந்தது. மருத்துவ வசதி பெறாமல் வீடுகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. டெங்கு பாதிப்புக்கு மருத்துவமனைக்கு வருபவர்கள் நூறு சதவீதம் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். இப்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எங்கும் பெரிய அளவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை எம்பி-யான கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மருத்துவர் அருணா ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x