Published : 03 Oct 2024 08:04 PM
Last Updated : 03 Oct 2024 08:04 PM

புதிய பாம்பன் ரயில் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு

தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம். | படம்: எல்.பாலச்சந்தர்

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதைக் கண்டித்து புதிய பாம்பன் ரயில் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். என தங்கச்சிமடத்தில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த செப்.20 அன்று கடலுக்குச் சென்ற செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்த 17 மீனவர்களையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்களை கைது செய்ததை கண்டித்து இன்று ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வலசை தெருவில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணா விரதப் போராட்டத்திற்கு மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமை வகித்தார். மீனவப் பிரதிநிதிகள் சகாயம், சம்சன், காரல் மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் உட்பட திரளானவர்கள் இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 150-க்கும் மேற்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்ட ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 175-க்கும் மேற்பட்ட படகுகளை விடுக்க வேண்டும், இரு நாட்டு மீனவர்கள் பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும், பாரம்பரியமான கச்சத்தீவு பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன்பிடி தொழில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணா விரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும், மீனவர்களின் கோரிக்கைளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால் புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழா அன்று பாலத்தை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x