Last Updated : 02 Oct, 2024 03:35 PM

 

Published : 02 Oct 2024 03:35 PM
Last Updated : 02 Oct 2024 03:35 PM

லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்: சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த 500+ பயணிகள்

கோப்புப்படம்

சென்னை: லண்டன், சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் 500 பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து பயணித்தனர்.

லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் செல்வது வழக்கம் ஆகும். இன்று (அக்.2) இந்த விமானத்தில் சென்னையில் இருந்து லண்டன் செல்வதற்காக 317 பயணிகள் அதிகாலை 2.30 மணிக்கு முன்பாகவே விமான நிலையம் வந்து அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துவிட்டு காத்திருந்தனர்.

இந்த நிலையில், லண்டனில் இருந்து சுமார் 300 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. லண்டனில் இருந்து வந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து லண்டன் புறப்படும் விமானம் தாமதம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, 317 பயணிகளும் ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டனர்.

லண்டன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, காலை 8.30 மணிக்கு விமானம் சென்னைக்கு வந்தது. பின்னர், விமானம் சுத்தப்படுத்தப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த 317 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். 5 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் லண்டன் புறப்பட்டுச் சென்றது.

அதேபோல், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் இருந்தே தாமதமாக சென்னைக்கு வந்தது. இதனால், சென்னையில் இருந்து இன்று அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது. ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டிருந்த 188 பயணிகளும் அந்த விமானத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றனர்.

லண்டன், சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 500 -க்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x