Published : 02 Oct 2024 04:19 AM
Last Updated : 02 Oct 2024 04:19 AM

தமிழக அமைச்சரவை அக்.8-ம் தேதி கூடுகிறது

கோப்புப் படம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த 28-ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகிய 4 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். கடந்த 29-ம்தேதி பதவியேற்ற இவர்கள், 30-ம் தேதி தங்களது துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் முதல்முறையாக அமைச்சர் ஆகியுள்ளனர்.

இதுதவிர, பொன்முடி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 பேரின் துறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் விதமாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 8-ம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின்போது, ரூ.7,618 கோடி முதலீட்டில், 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து அமைச்சரவையில் விவாதித்து, ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சிறுபுனல் மின் உற்பத்தி உள்ளிட்ட சில கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த கூட்டத்திலும் தொழில் கொள்கைகள் குறித்து ஆலோசித்து ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நிதிசார்ந்த திட்டங்கள், அதற்கான நிதி ஆதாரம், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x