Published : 01 Oct 2024 11:00 PM
Last Updated : 01 Oct 2024 11:00 PM

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்கி சோதனை

பாம்பன் புதிய பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலம் நேற்றிரவு இயக்கி சோதனை செய்யப்பட்டது | படம்: எல். பாலச்சந்தர்.

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனை இன்று நடைபெற்றது.

1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டுகளை கழிந்து விட்ட நிலையில், பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் தூக்குப் பாலத்தில் விரிசல் விழுந்ததாலும், பழைய பாலம் அருகிலேயே ரூ.535 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக 01.03.2019 அன்று காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

புதிய ரயில் பாலம் பாலத்தின் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது.

இந்தியாவின் முதல் செங்குத்து ரயில் தூக்குப் பாலம்: புதிய பாம்பன் ரயில் பாலத்தில் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து தூக்குப் பாலம் இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்குப் பாலம் ஆகும். பழைய ரயில் பாலத்திலுள்ள தூக்குப் பாலம் இரும்பிலானது ஆகும். 400 டன் எடை கொண்டது. அத்துடன் மனித உழைப்பைக் கொண்டு இயங்கக் கூடியது.

ஆனால் புதிய ரயில் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்திற்கு விமானத் தொழில் நுட்பத்திற்கு பயன்படக்கூடிய aluminium alloy (அலுமினிய உலோகக் கலவை) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 100 டன்கள் ஆகும். மேலும், மனித உழைப்பின்றி மோட்டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிஃப்ட் போன்று புதிய செங்குத்து தூக்குப் பாலம் இயங்கக்கூடியது. இதன் மூலம் மூன்று 3 நிமிடத்திற்குள் பாலத்தை திறந்து இரண்டு நிமிடத்திற்குள் பாலத்தை மூடி விடலாம்.

இந்த செங்குத்து தூக்குப் பாலத்தின் உயரம் 27 மீட்டர், நீளம் 77 மீட்டர் ஆகும். செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகிலேயே இரண்டு மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.

புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத் தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கு முன்னர் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனை துவங்கியது. முதலில் 500 செ.மீ அளவு மட்டுமே தூக்கப்பட்டு பின்னர் மாலையில் 5 மீட்டர் வரையிலும் தூக்குப் பாலம் தூக்கப்பட்டது. தொடர்ந்து இரவு முழுமையாக தூக்கப்பட்டது. பின்னர் சோதனை வெற்றி அடைந்ததால் ரயில்வே ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். புதிய ரயில் பாலத்தில் அனைத்து வகையான பரிசோனைகளும் நிறைவடைந்து ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் கிடைத்ததும் புதிய ரயில் பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு ரயில் சேவை மீண்டும் துவக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x