Published : 01 Oct 2024 04:42 PM
Last Updated : 01 Oct 2024 04:42 PM

மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிந்த மோசடி வழக்கு விசாரணை: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்

அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளை கடந்த 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 2 ஆயிரத்து 202 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக இன்று (அக்.1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

அப்போது நீதிபதி ஜி. ஜெயவேல், கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நூறு பேர் வீதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படும். அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்ட பிறகு இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தெரிவித்து விசாரணையை அக்.24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x