Published : 01 Oct 2024 05:28 AM
Last Updated : 01 Oct 2024 05:28 AM

தமிழகத்தில் 4-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்றுமுதல் அக்.4-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் மற்றும் தமிழகப் பகுதிகளின் மேல் ஒருவளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6-ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு,கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், நாளை மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

3-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 4-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 9 செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தலா 8 செமீ, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, மணியாச்சி ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x