Published : 01 Oct 2024 05:29 AM
Last Updated : 01 Oct 2024 05:29 AM

பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து செல்லும் போலீஸார்: காவல் வாகன விளக்குகளை எரியவிட்டவாறு செல்லவும் உத்தரவு

கோப்புப் படம்

சென்னை: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், சென்னை போலீஸார் பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம்தேதி பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை போலீஸார் முடுக்கிவிட்டனர். குறிப்பாக ரவுடிகளை ஏ, ஏ-பிளஸ், பி, சி என 4 பிரிவாக வகைப்படுத்தி, தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை முடுக்கிவிட்டனர். சென்னை காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக பிற மாநிலங்களில் பதுங்கியவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரவுடிகள் 3 பேர் அடுத்தடுத்து என்கவுன்ட்டரில் சுட்டுகொல்லப்பட்டனர். மேலும், 300-க்கும்மேற்பட்ட ரவுடிகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், 150-க்கும் மேற்பட்டோர்மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க பொதுமக்கள் அச்சமின்றி பொது வெளியில் நடமாடவும், ரவுடிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்கள் பார்வையில் படும்படி, முக்கிய சாலைகள் மற்றும் தெருக்கள் வழியாக போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து செல்ல வேண்டும் எனக் காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

மேலும், காவல் வாகனங்களில் மின் விளக்குகளை எரியவிட்டவாறு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, போலீஸார் தற்போது சென்னைமுழுவதும் ரோந்து சுற்றி வருகின்றனர். இவற்றை உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் குற்றச்செயல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருவதாக போலீஸ் அதிகாரிகள்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி போதைப் பொருட்கள் விற்பனை, பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x