Last Updated : 30 Sep, 2024 09:04 PM

 

Published : 30 Sep 2024 09:04 PM
Last Updated : 30 Sep 2024 09:04 PM

சென்னை விமான நிலைய மோப்ப நாய் சீசர் ஓய்வு: பதக்கங்கள் அணிவித்து, கேக் வெட்டி மரியாதை

சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் கடந்த 8 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட 9 வயது மோப்ப நாய் சீசர் பணி ஓய்வு பெற்றது. அந்த மோப்ப நாய்க்கு பதக்கங்கள் வழங்கி, கேக் வெட்டி, சிகப்பு கம்பள விரிப்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள 9 மாத மோப்ப நாய் யாழினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டுகள், அபாயகரமான பொருட்கள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள், உள்ளிட்டவைகளை கண்டுபிடிக்கவும், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணிக்காகவும் மோப்ப நாய்கள் “ஸ்குவாட்” பிரிவை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரிவில், பயிற்சி பெற்ற 10 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன. மோப்ப நாய்கள் ஷிப்ட் முறையில், 24 மணி நேரமும் சென்னை விமான நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

மோப்ப நாய்கள் பிரிவில் கடந்த 2016-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சீசர் என்ற 9 வயது மோப்ப நாய், தனது எட்டரை ஆண்டு கால பணியை இன்றுடன் நிறைவு செய்து பணியில் இருந்து ஓய்வு பெற்றது. அந்த மோப்ப நாய்க்கு வழியனுப்பும், பிரிவு உபசார விழா சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது சிறப்பாக பணி செய்து ஓய்வு பெறும் சீசருக்கு, பதக்கங்கள், மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஓய்வு பெறும் சீசருக்கு பதிலாக, புதிதாக வந்துள்ள யாழினி என்ற 9 மாத மோப்ப நாய்க்கு, வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியும் அங்கே ஒன்றாக நடந்தது.

பிரியாவிடை நிகழ்வு

சீசருக்கு வழியனுப்பும், யாழினிக்கு வரவேற்பும் நடந்த விழாவில், கேக் வெட்டப்பட்டு, இரு மோப்ப நாய்களுக்கும் வழங்கப்பட்டது. பின்னர், சிகப்பு கம்பள விரிப்பில், ஓய்வு பெறும் சீசர் அழைத்து கொண்டுவரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. அந்த வாகனத்தை மத்திய தொழில் பாதுகாப்புபடை டிஐஜி அருண் சிங், சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் உள்ளிட்டோர் இழுத்து சென்று, சீசரை வழி அனுப்பி வைத்தனர். சீசரை கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் பராமரித்து வந்த, பாதுகாவலர்கள், கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள 9 மாத யாழினி மோப்ப நாய், பிரிட்டிஷ் நாட்டு வகையைச் சேர்ந்த லாப்ர டோர் ரெட் ரிவர் இனத்தை சேர்ந்தது. இதற்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் ஆறு மாத காலம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு, இங்கு அழைத்து வரப்பட்டுள்ளது. யாழினி வெடிபொருள் போதை பொருள், வாகனங்களை பரிசோதித்து மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிப்பது, பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வது போன்றவைகளில் சிறப்பான பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் கூறுகையில், “சென்னை விமான நிலைய பாதுகாப்பில் 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த மோப்ப நாய் சீசர் பணி ஓய்வு பெறுகிறது. அந்த சீசருக்கு சிறப்பான முறையில் வழியனுப்பும் விழாவை நடத்தினோம். சீசரின் இடத்தை நிரப்புவதற்கு, யாழினி என்ற புதிய மோப்ப நாய் சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்படுகிறது. இந்த யாழினி பயிற்சியின்போது மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. யாழினியும், சீசரைப் போல் சிறப்பாக செயல்படும்” என்றார்.

சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், “பணி ஓய்வு பெற்றுள்ள மோப்ப நாய் சீசர், சில நாட்கள் சென்னையில் மோப்ப நாய்கள் பிரிவில் வைக்கப்பட்டு இருக்கும். பின்னர், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் உள்ள ஓய்வு பெற்ற மோப்ப நாய்களுடன் சேர்க்கப்படும். இந்த மோப்ப நாயை, தத்து எடுப்பதற்கு, விலங்கியல் ஆர்வலர்கள் யாராவது முன் வந்தால், விதிமுறைகளின் படி, ஒப்பந்தம் செய்து விட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x