Published : 28 Sep 2024 02:05 PM
Last Updated : 28 Sep 2024 02:05 PM

பிரசாத தரத்தை உறுதி செய்ய கோயிலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி: தமாகா வலியுறுத்தல்

எம்.யுவராஜா | கோப்புப்படம்

சென்னை: “தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் தமிழக அரசு அந்தந்த கோயில்களுக்கென்றே ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை நியமித்து பிரசாதங்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை தமிழக இந்துசமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும்,” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வார காலமாக தமிழக கோயில்களில் பக்தர்கள் பிரசாதங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம் பிரசாதங்களில் “தரம் முறையாக உள்ளதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது ஏற்கனவே தமிழகத்தினுடைய அறநிலையத்துறை இந்துக் கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக பேசப்படுகின்றது.

இந்தச் சூழ்நிலையில் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை பக்தர்கள் புனிதமாக எடுத்துக் கொள்வார்கள். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் அதிகம் உள்ளன. அந்த கோயில்களிலும் இதே போன்று பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. திருப்பதியில் நடந்தது போல் இங்கும் நடந்து விடாமல் இருக்க தமிழக அரசு கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் தயாரிப்பதற்கான மூலப் பொருளின் தரத்தை பரிசோதித்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கோயில்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தான் பிரசாதங்கள் தயாரிக்கப்பட வேண்டும். சில கோயில்களில் வழங்கப்படும் திருநீறில் கலப்படம் உள்ளது. நல்ல குங்குமம் கிடைப்பதில்லை. தீப எண்ணெயில் கலப்படம் உள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் தமிழக அரசு அந்தந்த கோயில்களுக்கென்றே ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை நியமித்து பிரசாதங்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை தமிழக இந்துசமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும். திருப்பதியில் ஏற்படுத்தப்பட்ட களங்கத்தைப் போல தமிழகத்திலும் நடைபெற்று விடக்கூடாது. இதனை தமிழக அரசின் அறநிலையத்துறை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கோயில்களின் புனிதத்தை காக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x