Published : 28 Sep 2024 03:45 AM
Last Updated : 28 Sep 2024 03:45 AM

மெட்ரோ ரயில் திட்டம் முதல் மீனவர் பிரச்சினை வரை: பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்ன?

சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்த முதல்வர் ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிகள் மற்றும்ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான மத்திய அரசின்நி தியை உடனே வழங்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். சென்னை மெட்ரோ2-ம் கட்ட திட்ட பணிகள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டங்களுக்கான நிதி கோரியும், மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தலைமைச் செயலர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பிரதமர் உடனான சந்திப்பு, இனிய சந்திப்பாக இருந்தது. பிரதமரும் எங்களுடன் மகிழ்ச்சியுடன் பேசினார். இந்தசந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின்கையில்தான் உள்ளது.

மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி தருமாறு 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன். அதன்படி, சென்னை மெட்ரோ ரயில்2-ம் கட்ட பணிகளுக்கு இதுவரை ரூ.18,564 கோடி செலவிடப்பட்டாலும், மத்தியஅரசின் ஒப்புதல் கிடைக்காததால், மத்திய அரசின் நிதிவழங்கப்படவில்லை. இந்தநிதியை தாமதமின்றி உடனே வழங்க கேட்டுள்ளேன்.

எந்த மாநிலத்திலும் மொழி திணிப்பு இருக்காது என தேசியகல்விக் கொள்கை உறுதி அளித்தாலும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த ஷரத்துஇல்லை. எனவே, ஒப்பந்தம்திருத்தப்பட வேண்டும் என்றுகூறிவருகிறோம். இந்த சூழலில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படாததை காரணம் காட்டி இந்த ஆண்டு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியில் முதல்தவணை இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியவில்லை. இந்த நிதியையும் உடனே வழங்க வலியுறுத்தி உள்ளோம்.

நமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளுக்கு செல்லும் மீனவர்களை, அவர்களது படகுகளுடன் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் துன்புறுத்துகின்றனர். இலங்கை கடற்படையால் தற்போது 191 படகுகளுடன், 145 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசு உடனேஇலங்கை அரசை வலியுறுத்தி,மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும். கொழும்புவில் இந்தியா - இலங்கை இடையே அடுத்த மாதம் நடக்கஉள்ள கூட்டுக் குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்துதீர்வு காண வேண்டும். இலங்கையின் புதிய அதிபரிடம் இந்தகோரிக்கையை மத்திய அரசுவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

நமது கோரிக்கைகளை கவனமாக கேட்ட பிரதமர், இதுகுறித்து கலந்துபேசி முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார். 3 கோரிக்கைகளையும் பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x