Published : 28 Sep 2024 06:01 AM
Last Updated : 28 Sep 2024 06:01 AM

திமுக ஆட்சியில் போதை பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்: பழனிசாமி, டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில் போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழக மாறியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுகபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.

பழனிசாமி: சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல இருந்த சரக்கு பெட்டகத்தில் ரூ.110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ என்றபோதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இக்கடத்தல் சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திமுகவின் அயலக அணிநிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது.

பொது வெளியில் மத்திய அரசை எதிர்ப்பதும், தனது குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகள் நலன்களைப் பாதுகாக்க, திரை மறைவில் ஆதரவு என்று திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு ஆணிவேர் எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சிறு சிறு கடத்தல் வேலை செய்யும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன என்று மக்கள் குழம்பிப் போயுள்ளனர். இதுபோன்ற போதைப் பொருள்கடத்தல், விற்பனை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே பாழாகும். இனியாவது திமுக அரசு, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடுதடுக்க சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன்: சென்னைதுறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான கொடிய வகை போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசின் அலட்சியப் போக்கால் சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையை தடுத்து, இதுபோன்று கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x