Published : 26 Sep 2024 12:09 PM
Last Updated : 26 Sep 2024 12:09 PM

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்ற நிபந்தனைகள் என்னென்ன?

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

புதுடெல்லி: திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கவோ, சந்தித்துப் பேசவோ கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியது. இதுகுறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வெவ்வேறானவை.

எனவே, செந்தில் பாலாஜி சட்டபூர்வமாக அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை. இந்த வழக்கை விசாரித்து முடிப்பதற்கு ஏற்படும் காலதாமதம், நீண்ட நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருவது, இந்த இரண்டு காரணங்களையும் அடிப்படையாக கொண்டுதான், உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது, என்று கூறினார்.

மேலும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்: > ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும், கட்டுப்பாடும் இல்லை.

> திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

> சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது.

> இந்த வழக்கில் செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே இருப்பதால், அவருடைய அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.

> ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும்.

> விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

> வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது, என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

திமுகவினர் கொண்டாட்டம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, புழல் சிறையின் வெளியே திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல், கரூரிலும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x