Published : 26 Sep 2024 05:05 AM
Last Updated : 26 Sep 2024 05:05 AM

முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: நிதி நிலுவை குறித்து பிரதமரிடம் பேசுகிறார்

சென்னை: டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கிறார்.

தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் இந்த நிதியை விடுவிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மொத்த செலவான ரூ.63,246 கோடியில், மாநில அரசின் பங்கு ரூ.22,228 கோடியாகும், மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடியாகும். மீதமுள்ள நிதியான ரூ.33,593-ஐ வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில், மத்திய அரசின் பங்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்கா சென்று கடந்த செப்.14-ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன் என்றார். இதையடுத்து, பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கோரப்பட்டது. பிரதமர் அமெரிக்கா சென்ற நிலையில் செப்.25-ம் தேதி சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், நாளை (செப்.27) சந்திக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினே நேற்று தொண்டர்களுக்கு எழுதிய மடலில் தெரிவித்துள்ளார். அந்தவகையில், இன்று மாலை 5.10 மணிக்கு சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இரவு, டெல்லியில், தமிழக எம்.பி.க்கள் அவரை வரவேற்கின்றனர். தொடர்ந்து, நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

நாளை சென்னை திரும்புகிறார்: அப்போது, பள்ளிக்கல்வி தொடர்பான நிதி, மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி, ஜிஎஸ்டி இழப்பீடு, பல்வேறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கான நிதி மற்றும் ஒப்புதல், மேகேதாட்டு, முல்லைப்பெரியாறு விவகாரங்கள் குறித்து மனு அளிப்பார் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பு முடிந்து, நாளை இரவு 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x