Published : 26 Sep 2024 07:30 AM
Last Updated : 26 Sep 2024 07:30 AM

60 நாட்களுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு: டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 15,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் 99.79 அடியாக சரிந்த நிலையில், அணையின் இடதுகரையில் உள்ள 16 கண் மதகு பகுதியில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது.

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்தது. இந்நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 15 ஆயிரம்கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதிதண்ணீர் திறக்கப்படும். அணையில் போதிய அளவு நீர் இல்லாததால் கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. அப்போது அணையின் நீர்மட்டம் 43.52 அடியாகவும், நீர் இருப்பு 13.97 டிஎம்சியாகவும், நீர்வரத்து 404 கன அடியாகவும் இருந்தது. தொடர்ந்து, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து, மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை ஜூலை 30-ம் தேதி எட்டியது.

முன்னதாக, ஜூலை 28-ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர், ஜூலை 30-ம் தேதி கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, 16 கண்மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததாலும் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியில் இருந்து, 15 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 27-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71-வதுமுறையாக 100 அடியை எட்டியது. 60 நாட்களுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, அணையின் நீர்மட்டம் 99.79 அடியாகவும், நீர்இருப்பு 64.56 டிஎம்சியாகவும், நீர்வரத்து 1,537 கன அடியாகவும் உள்ளது.

ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 23-ம் தேதிநீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மழைப்பொழிவு காரணமாக நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x