Last Updated : 25 Sep, 2024 08:56 PM

 

Published : 25 Sep 2024 08:56 PM
Last Updated : 25 Sep 2024 08:56 PM

‘கூல் லிப்’ விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்

மதுரை: பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது. மேலும், குட்கா, கூல் லிப் போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் போதைப் பொருள் வழக்குகளில் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி பரத சக்கரவர்த்தி, ‘கூல் லிப் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். பின்னர், கூல் லிப் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கர்நாடகம் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், முன்பெல்லாம் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு மரியாதை கலந்த பயம் இருந்தது. தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்களும் கண்டித்தனர். ஆனால், தற்போது அப்படியான சூழல் இல்லை சிறிது கண்டிப்புடன் நடத்தினால் கூட மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவை எடுக்கின்றனர். பெற்றோர்களும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது என்கின்றனர். மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைந்து மாணவர்களை நல்வழிப் படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

தமிழக அரசு ஏற்கெனவே கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலை போன்ற போதை பொருட்களை விற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தியும் வருகிறது. எனவே, மத்திய அரசின் புகையிலை பொருட்கள் தடை சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வந்து, நாடு முழுவதும் பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, முதலில் நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, கூல் லிப் போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்.4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x