Published : 25 Sep 2024 07:23 PM
Last Updated : 25 Sep 2024 07:23 PM

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்றும், குற்ற விசாரணை முறைச்சட்டத்தை பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும், இந்திய சாட்சிகள் சட்டத்தை பாரதிய சாக்க்ஷய அதிநியம் ( பிஎஸ்ஏ) என்றும் பெயர் மாற்றம் செய்து கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழக வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஏற்கெனவே திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேபோல இந்த சட்டங்களை ஆதரித்து பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்நிலையில், இந்த புதிய சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், “இந்த புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்திருப்பதன் மூலம் தமிழகத்தில் தமிழர்கள் மீது இந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. இந்த சட்டங்களை அமல்படுத்தும் முன்பாக இதுதொடர்பாக எந்தவொரு விவாதமும் நடத்தப்படவில்லை. எனவே இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். அமல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x