Published : 25 Sep 2024 04:26 PM
Last Updated : 25 Sep 2024 04:26 PM

‘அவதூறு வழக்கில் இபிஎஸ் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ - தயாநிதி மாறன் தரப்பு வாதம்

சென்னை: அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தயாநிதி மாறன் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, மத்திய சென்னை தொகுதியின் எம்பி-யான தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி-யான தயாநிதி மாறன், முன்னாள் முதல்வரான பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தன் மீது தவறான குற்றச்சாட்டை பழனிசாமி சுமத்தி உள்ளார். தனது தொகுதி நிதியில் இருந்து 95 சதவீதத்தை செலவழித்துள்ளதாக கூறி அதுகுறித்த பட்டியலையும் வெளியிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக இன்று (செப்.25) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேகானந்தன், “மனுதாரரான தயாநிதி மாறன் ஆஜராகவில்லை என்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்” எனக் கோரினார். அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, சி.அய்யப்பராஜ் ஆகியோர், இந்த வழக்கில் இருந்து பழனிசாமியை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். அதற்கு தயாநிதி மாறன் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிடப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விவாதங்கள் நிறைவடையாததால் நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து இருதரப்பும் அடுத்த விசாரணையின் போது தங்களது வாதங்களை முன்வைக்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x