Published : 25 Sep 2024 03:57 AM
Last Updated : 25 Sep 2024 03:57 AM

தீவிரவாத இயக்கத்துக்கு தமிழகத்தில் ஆள்சேர்த்தது தொடர்பாக சென்னை உட்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை

தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை ஏழுகிணறு மற்றும் நாகர்கோவில் இளங்கடை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் ஒரு யூ-டியூப் சேனலில் இருந்ததை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்து துப்பு துலக்கினர்.

இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முன்னாள் கவுரவ பேராசிரியரான ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்தி வந்ததும், அதன்மூலம், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும் தெரியவந்தது. ராயப்பேட்டை ஜான்ஜானிகான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிறும் கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஹமீது உசேன், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட 6 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. சென்னையை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து, ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, செல்போன், சிம்கார்டு, பென் டிரைவ், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், சிலரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் ஏழுகிணறு பகுதியில் ரகுமான் என்பவர் வீட்டிலும், நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ், சையது அலி ஆகியோர் வீடுகளிலும், ராயப்பேட்டையில் முகமது அலி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி யிலும் சோதனை நடத்தப்பட்டது.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். நன்மங்கலத்தில் பாண்டியன் நகரில் வசிக்கும் அகமது (28), சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் லோட்டஸ் காலனியில் வசிக்கும் முகமது யாசின் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. கிளாம்பாக்கத்திலும் ஒரு வீட்டில் சோதனை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள இளங்கடை பகுதியில் வசிக்கும் முகமது அலி என்ற அலி ஆலிம்ஷா வீட்டிலும் சோதனை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், 2 வாரங்களுக்கு முன்புதான் இளங்கடைக்கு வாடகைக்கு குடியேறியுள்ளார். இதற்கு முன்பு நாகர்கோவில் வட்டவிளை பகுதியில் குடியிருந்ததும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு 12 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், கணக்கில் வராத பணம், டிஜிட்டல் ஆவணங்கள், வெளிநாட்டு தொடர்பு குறித்த ஆவணங்கள், தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பான துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது. முழுமையான சோதனைக்கு பிறகே இதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x