Published : 25 Sep 2024 06:04 AM
Last Updated : 25 Sep 2024 06:04 AM

சென்னை அறிவியல் விழா தொடக்கம்: பொதுமக்கள் நாளை வரை பார்வையிடலாம்

கோப்புப் படம்

சென்னை: தமிழக அரசின் சென்னை அறிவியல் விழா கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்வை பொதுமக்கள் நாளை (செப். 26) வரை பார்வையிடலாம்.

தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அறிவியல் நகரம் அமைப்பு பொதுமக்களிடம் அறிவியல் விழிப்புணர்வு கருத்துகளை பரப்புவதற்காக பல்வேறு விதமான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக சென்னை அறிவியல் விழா 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடப்பாண்டுக்கான சென்னை அறிவியல் விழா சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நேற்று தொடங்கியது.

இதில் அறிவியல் கண்காட்சி அரங்குகள், செய்முறை விளக்கங்கள் மற்றும் லேசர் ஒளி, ஒலிக்காட்சிகள் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி நாளை (செப்.26) வரை நடைபெற உள்ள விழாவை காலை 10 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

இதற்கிடையே, சென்னை அறிவியல் விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று மதியம் தொடங்கி வைத்து,அதிலுள்ள கண்காட்சி அரங்கு களை பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, ‘‘சென்னையில் அறிவியல் நகரம்திமுக ஆட்சியில் 2008-ம் ஆண்டுதொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் விழா அங்கு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு அறிவியல் விழாவில் இந்திரா காந்தி அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம், அண்ணாபல்கலைக்கழகம், சென்னைஐஐடி, சென்னை பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆய்வு நிறுவனம், இந்திய மருத்துவ இயக்குநரகம் போன்ற முக்கிய உயர்கல்விமற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்சார்பில் 75 காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

3 நாள் நடைபெறும் இந்த விழாவானது மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்’’என்றார். இந்நிகழ்வின் போது உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x