Published : 24 Sep 2024 04:45 PM
Last Updated : 24 Sep 2024 04:45 PM

சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லிக்கு ஐகோர்ட் தலைமைப் பதிவாளர் பொறுப்பு!

சென்னை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல மேலும் சில மாவட்ட நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக பணியாற்றி வந்த மாவட்ட நீதிபதி எம்.ஜோதிராமன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமைப் பதிவாளராக, ஏற்கெனவே சென்னை பெருநகர முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வரும் எஸ்.அல்லியை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி எஸ்.அல்லி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் போன்றோர் தொடர்புடைய அமலாக்கத் துறை வழக்குகளை விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி ஜெ.செல்வநாதன், சென்னை உயர் நீதிமன்ற ஆய்வு பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி ஏ. அப்துல் காதர், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஊழல் தடுப்பு கூடுதல் பதிவாளராக பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதி ஜி. ஸ்ரீராமஜெயம், சென்னை உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு கூடுதல் பதிவாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பதிவாளராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி கே. சீதாராமன், சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய கே.அய்யப்பன் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஊழல் தடுப்பு கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி என். வேங்கடவரதன், சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த எஸ். கார்த்திகேயனை சென்னை பெருநகர முதன்மை அமர்வு நீதிபதியாக நியமித்து உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x