Last Updated : 24 Sep, 2024 04:38 PM

1  

Published : 24 Sep 2024 04:38 PM
Last Updated : 24 Sep 2024 04:38 PM

சென்னையில் வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைத்தால் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை

கோப்புப்படம்

சென்னை: வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைக்கக் கூடாது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக உள்ள பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடுத்து அவ்வப்போது தகராறு செய்கின்றனர்.

சில இடங்களில் வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகையுடன் பூந்தொட்டிகளை வைத்தும், மண் பைகளை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர். சென்னையில் வாகனங்களை நிறுத்த முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுத்திச் செல்ல நேரிடுகிறது.

எனவே, வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ என்ற அறிவிப்பு பலகைகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னையில் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், சென்னை போக்குவரத்து போலீஸார் இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், “முன் அனுமதியின்றி, ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது.

எனவே, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அங்கீகரிக்கப்படாத இடங்களில் ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x