Published : 24 Sep 2024 06:12 AM
Last Updated : 24 Sep 2024 06:12 AM

மூளைச்சாவு அடைந்த 2 ஆயிரம் பேர் தானமாக வழங்கிய 11,500 உறுப்புகளால் ஏராளமானோர் மறுவாழ்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தொடங்கப்பட்ட கடந்த16 ஆண்டுகளில் மூளைச்சாவு அடைந்த சுமார் 2 ஆயிரம் பேரிடம்இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் என மொத்தம் 11,411 உறுப்புகள் தானமாக பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு, ‘மறுபிறவி’ என்ற உறுப்புதான விழிப்புணர்வு குறுந்தகடு ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். உறுப்பு மாற்றுசிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹு, மருத்துவம் - ஊரக நல பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 1,998 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என மொத்தம் 7,207 முக்கிய உறுப்புகள், பலரது உயிரை காப்பாற்றியுள்ளன. 4,204திசுக்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது. உறுப்பு தானத்தில் கடந்த 8 ஆண்டுகளாக தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

இதுவரை 272 கொடையாளர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு, கடந்த ஓராண்டில் மட்டும் 14,300 பேர் உறுப்பு தானம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முதல்வர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, காப்பீட்டு திட்டம் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரையும்,சிறுநீரகத்துக்கு ரூ.4 லட்சம் வரையும், இதயத்துக்கு ரூ.18 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் வேண்டி மொத்தம் 7,797 பேர் காத்திருக்கின்றனர்.

வட்டார அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் மட்டுமே இருந்த பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துகள், தற்போது 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ளன. கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ‘இதயம் காப்போம்’ திட்டம்மூலம், இதயம் பாதித்தவர்களுக்கு உடனடியாக உயிர்காக்கும் உன்னத மருந்து (Loading Doses) போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 11,000 பேர் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x