Published : 23 Sep 2024 02:21 PM
Last Updated : 23 Sep 2024 02:21 PM

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி: சென்னை கண்ணப்பர் திடல் பயனாளிகள் 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு

சென்னை கண்ணப்பர் திடல் பயனாளிகள் 114 பேருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். உடன் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், தயாநிதி மாறன் எம்பி, எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, தாயகம் கவி, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர். படம்: ச.கார்த்திகேயன்.

சென்னை: 'இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக, சென்னை கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக சுகாதாரமற்ற நிலையில் வசித்து வந்த 114 பயனாளிகளுக்கு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் உதயநிதி இன்று (திங்கள்கிழமை) வழங்கினார்.

சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிக்காக அகற்றப்பட்டன. இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் கைவிடப்பட்ட மாநகராட்சி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி அங்கு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, அங்கு 114 பயனாளி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்களுக்கு மூலக்கொத்தளத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வழங்க இருந்த நிலையில், பயனாளி பங்குத்தொகை ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்தை செலுத்த இயலவில்லை என பயனாளிகள் தெரிவித்தனர். இலவசமாக வீடு கோரி சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, பயனாளி பங்கு தொகையில் 3ல் இரு பங்கை மாநகராட்சி வழங்க முன் வந்தது. ஒரு பங்கை பயனாளிகள் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

அந்தத் தொகையையும் வாரியமே வட்டியில்லா கடனாக வழங்க முன் வந்திருப்பதாகவும், அந்த தொகையை 20 ஆண்டுகளுக்கு செலுத்த அறிவுறுத்தி இருப்பதாகவும் பயனாளிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கண்ணப்பர் திடலில் இன்று நடைபெற்றது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று 114 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: “தங்களின் 22 ஆண்டுகால கனவை இன்றைக்கு இந்த அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை அவசியம். திமுகவை பொறுத்தவரை சொல்வதைச் செய்யும் இயக்கம். அடுத்த மழை வருவதற்குள் தங்களுக்கு வீடு வழங்கப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். சொன்னபடியே தங்களுக்கு தற்போது வீடு ஒதுக்கி உள்ளார்.

இனி தங்களுக்கான வீட்டில் நிம்மதியாக இருக்கலாம். வீடு இல்லாததால் தங்களுக்கு அரசு ஆவணங்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இனி ஆவணங்கள் எளிதில் கிடைக்கும். பயனாளி பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுங்கள். அவர்களைப் பள்ளிக்கு அனுப்பினால் போதும். மற்றதை முதல்வர் பார்த்துக்கொள்வார்” என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

தொடர்ந்து, ஆணைகளை பெற்ற பயனாளிகள், தங்கள் அவலத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, வீடு பெற்றுத்தர உதவிய 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு நன்றி கூறினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், தயாநிதி மாறன் எம்பி, எம்எல்ஏ-க்கள் இ.கருணாநிதி, தாயகம் கவி, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் சு.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x