Published : 23 Sep 2024 12:01 PM
Last Updated : 23 Sep 2024 12:01 PM

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு: தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் , உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரா.முத்தரசன் (சிபிஐ) - “இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிஷேச திருச்சபையின் தலைமை பேராயருமான எஸ்றா சற்குணம் இயற்கை எய்தினார் என்கிற செய்தி துயரமளிக்கிறது. சிறுபான்மையினர் நலனுக்காக போராடியவர், ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவரது மறைவு பேரிழப்பாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

வைகோ (மதிமுக) - “இந்திய சுவிசேஷ திருச்சபையின் முதல் தேசியத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம். முதல் திருநங்கை போதகராக நியமிக்கப்படக் காரணமானவர். மதச் சிறுபான்மையினர் நலன் காக்கவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்வரிசையில் இணைந்து குரல் கொடுத்தவர் அவர்.இத்தகைய பெருமைக்குரிய அவரின் மறைவு, கிறித்துவ சமுதாயத்தினருக்கும், சமூகநீதி இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும்,” என்று கூறியுள்ளார்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) - “பேராயர் எஸ்றா சற்குணம் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவராக இருந்து மிக சிறப்பாக செயல்பட்டவர். தமிழகத்தில் புதிதாக தேவாலயங்கள் எழுப்புவதற்கு பெரும் துணையாக இருந்தவர். தமது வாழ்நாள் முழுவதும் அவர் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக உரிமைக் குரல் எழுப்பி சமூக நீதிக்காக துணிவுடன் போராடியவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா (மமக) - “எஸ்றா சற்குணத்தை பொறுத்தவரை தாம் ஒரு பேராயராக மட்டும் இல்லாமல் அரசியல் குறித்த ஆழ்ந்த ஞானமிக்கவராகவும் திகழ்ந்தவர். சிறுபான்மையினர்களின் நலனில் அக்கறை கொண்டவர். தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க அரும்பாடுபட்டவர்.மறைந்த முதல்வர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர். சமூக சேவை மக்கள் தொண்டு இறைப்பணி எனப் பல தளங்களில் தமது பணியைச் சிறப்பாகச் செய்தவர். துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் கருத்துகளை வெளிப்படுத்துபவர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) - “பேராயர் எஸ்றா சற்குணம் மறைந்த முதல்வர் கருணாநியின் அன்புக்கு பாத்திரமாக திகழ்ந்தவர். மத போதகராக இருந்தாலும், அரசியல் ஞானம் நிறைந்தவர். திமுக சார்பில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளிலும், அனைத்து கட்சி நிகழ்ச்சிகளிலும் மற்றும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக தனது கருத்துக்களை பதிவு செய்து, சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக திகழ்ந்தவர். பல்வேறு மக்கள் நலனுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்,” என்று பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x