Last Updated : 21 Sep, 2024 01:19 PM

 

Published : 21 Sep 2024 01:19 PM
Last Updated : 21 Sep 2024 01:19 PM

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி: ஐகோர்ட் கிளை நிபந்தனை முன்ஜாமீன்

மதுரை: இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமீன் வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை, சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் அவருக்கு நிபந்தனை விதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கதிரவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில், ‘ராமநாதபுரம் மாவட்டம் அதியமான் பீச் பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது. இதுதொடர்பாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கூறி என் மீது மண்டபம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் என்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “மனுதாரர் மத மோதல்களை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளார். இவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது,” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதே போல் புகார் கொடுத்தவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர் இஸ்லாமிய சமுதாயத்தினரை தீவிரவாதிகளாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். எனவே, இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது,” என எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, “மனுதாரர் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் இதுபோன்று இரண்டாவது முறையாக பதிவிட்டுள்ளார். மனுதாரர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக உள்ளார். எனவே, இது போன்ற பதிவுகளை இனி பதிவிடமாட்டேன் என்றும், சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுவதாகவும் விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x